திராவிடத்தின் பல உருட்டுகளில் இதுவும் ஒன்று - பகுதி 2
தமிழகத்தின் வளர்ச்சியும் திராவிட அறிவுஜீவிகளின் சாமர்த்தியமான வாதமும்
கடந்த சில வருட காலமாக திராவிட சார்பு அறிவுஜீவிகளாலும், சார்பு ஊடகவியலாளர்களாலும் முன்னெடுக்கப்படும் மிக சாமர்த்தியமான வாதம்தான் ‘திராவிட ஆட்சியில்தான் தமிழ்நாடு பொருளாதாரம்,தொழிற்துறை, மனித வள மேம்பாடு குறியீடு இவைகளில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாறியுள்ளது ‘ என்பது.
இதை திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் உங்களுக்கு உணர்த்த விரும்புவது திராவிட கட்சிகளேயே ஆட்சியில் அமர்த்துங்கள் என்பதுதான். குறிப்பாக திமுகவை.
இந்த வாதத்தை வெறும் தட்டையாக அணுகினால், திராவிட கட்சிகளை விமர்சிப்பது கூட பாவம் என்பது போல தோற்றம் தரும்.
அதனால் இந்த சாமர்த்தியமான வாதத்தை பல கோணங்களில் அணுகி , சிறிய சிறிய பகுதிகளாக உடைத்துஆராய விரும்புகிறேன்.
அதற்கு முன்பு முதலிலேயே சொல்ல விரும்புவது தமிழ்நாட்டின் இந்த பொருளாதார, தொழில்துறை, கல்விதுறை , மனித வள மேம்பாடு குறியீடு என்பவற்றில் நிகழ்ந்த வளர்ச்சிகளை மறுக்கவில்லை. இது நிகழ்ந்திருக்கிறது.இந்தியாவின் முதன்மையான மாநிலமாகவும் இருக்கிறது.
ஆனால் நான் திராவிட சார்பு அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள் போல தட்டையாக இதை அணுகி, அதனால் திராவிட கட்சிகள் மட்டுமே அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற வாதத்தை வைக்கக்கூடாது என்கிறேன்.
மேலே குறிப்பிட்டது போல, பல கோணங்களில், சிறு சிறு பகுதிகளாக உடைத்தே அணுகுகிறேன்.
1. முதலாவது வாதத்திற்காக, இந்த வளர்ச்சி திராவிட கட்சிகளினால் மட்டுமே நிகழ்ந்தது என வைத்துகொள்வோம்.
வளர்ச்சி குறியீடுகள் மட்டும் தான் மக்கள் தங்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்எடுக்கவேண்டியதா?
இதுதான் திராவிடத்தின் வாதம் எனில் மேற்கு ஐரோப்பிய , ஸ்கண்டிநேவிய நாடுகளில்தேர்தலே அவசியமில்லை. ஏனெனில் இங்கு வளர்ச்சி குறியீடுகள் காலத்திற்கு காலம் புதிய உயரத்தை தொட்டு கொண்டிருக்கின்றன.
வளர்ச்சி குறியீடுகள் ஒரு கட்சி ஆட்சியின் ஊழலையோ, மக்கள் நல விரோத திட்டங்களையோ,இயற்கை வளசுரண்டலையோ , ஜனநாயக விரோத செயல்பாட்டுகளையோ , அரசு இயந்திரத்தை தனது அடியாளாக மாற்றியதையோ பிற இத்யாதிகளையோ காட்டாது.
அதனால்தான் திராவிட சார்பாளர்கள் சாமர்த்தியமாக எல்லா விவாதங்களிலும் மனித வள மேம்பாட்டு குறியீட்டு வளர்ச்சியை மட்டும் தூக்கிகொண்டு மற்றவற்றை இதன் பின்னே மறைக்க முயல்கிறார்கள்.
உதாரணத்திற்கு 2006 திமுக ஆட்சியில், அதனது அமைச்சர்கள் நில பறிப்புகளை செய்தார்கள் என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அவைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் வளர்ச்சி குறியீடுகளை மனதில் வைத்து, மீண்டும் அவர்களை ஆட்சியில் அமர்த்தி இருக்கவேண்டும் என்பதாக இருக்கிறது திராவிடத்தின் வாதம்.
ஜெயலலிதா இட ஒதுக்கீடு வரம்பை 69% ஆக உயர்த்தினார் என்பதற்காக அவரின் ஆட்சிகாலங்களில் நடந்த மற்றைய முறைகேடுகளை பற்றி யோசிக்காமல், அதிமுகவிற்கு வாக்களிக்கவேண்டும் என சொல்வது எவ்வளவு நகைச்சுவையானது?
மேற்கு ஐரோப்பாவில் வளர்ச்சி குறியீடுகளை தாண்டி, சிறு சிறு scandal களுக்காக எல்லாம் மக்கள் அரசுகளைமாற்றியமைத்திருக்கிறார்கள்.
காரணம் பொருளாதார , சமூக வளர்ச்சி என்பவை மிக முக்கியமானவைதான். ஆனால் அதை தவிர்த்து மற்ற பல காரணிகளும் ஒரு அரசை தேர்ந்தெடுப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஆனால் திராவிட அறிவுஜீவிகள் தங்களது சாமர்த்தியமான வாதமாக பொருளாதார, சமூக வளர்ச்சி குறியீடுகளை மட்டுமே பேசி, திராவிடத்தின் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் ‘ஒரு பொருட்டே அல்ல’ என்று மக்களை நம்பவைக்க முயல்கிறார்கள்.
2. திராவிட ஆட்சியாளர்கள் மட்டுமே இந்த பொருளாதார,சமூக வளர்ச்சிக்கான முழு காரணகர்த்தாவாக உரிமை கோரமுடியுமா?
இந்த கேள்வியை முன்வைத்ததன் காரணம், ஒரு இனத்திற்கு என்று இருக்கும் உள்ளார்ந்த பண்புகளை நாம் கவனிக்க தவறுகிறோம் என்பதாலேயே. இந்த உள்ளார்ந்த பண்புகள் வரலாற்று ரீதியாக பல்வேறு வடிவங்களில் கடத்தப்பட்டு கொண்டே வரும். அவை அவர்களின் வாழ்வியல் கோட்பாடுகளாக,நெறிகளாக, பண்பாடுகளாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு கொண்டே வரும்.
இதை நிறுவுவது கொஞ்சம் சிக்கலானது. இதை புரிந்து கொள்ள அந்த இனத்தின் வரலாறு பற்றிய புரிதல் இருக்கவேண்டும். அதனால் சில வரலாற்று உதாரணங்கள் மூலம் உங்களுக்கு விளங்க வைக்க முயற்சிக்கிறேன்.
தமிழினத்தின் வரலாற்றை எடுத்து பார்த்தால்,அவர்களின் உள்ளார்ந்த பண்புகளில் ஒரு தொடர்ச்சியை கவனிக்கலாம்.
தமிழ் இனத்தின் உள்ளார்ந்த பண்புகளில் ஒன்றுதான் அதனது எழுத்தறிவு மீதான பற்று அல்லது கல்வியறிவு மீதான பற்று.
இதைப்பற்றி உங்களுக்கு விளக்குகிறேன்.
• கீழடி அகழ்வாராய்ச்சியின் முக்கியமான முடிவுகளில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழ்நாட்டை தவிர்ந்த இந்தியாவின் மற்றைய பகுதிகளில் கிடைத்த பிராமி சாசனங்கள், கல்வெட்டுகள் ஒருவிடயத்தை உறுதிபடுத்துகின்றன. அவை எழுத்தறிவு என்பது அன்றைய காலத்தில் , ஒரு அரச அதிகாரத்துடன்இணைந்த ஒரு கூட்டத்திற்கு மட்டுமே இருந்தது என்பதை.
ஆனால் தமிழ்நாட்டின் கீழடியில் கிடைத்த பானைகளில் எழுதப்பட்டிருந்தவை சாமானியர்களால் எழுதப்பட்டவை.
இதையே மொழி ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன், கீழடி அகழ்வுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னே எழுதிய தன்னுடைய ‘ சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம்’ எனும் கட்டுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்.
“கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் அகழ்வாய்வு செய்தபோது நூற்றுக்கணக்கான பானைக்கீறல்கள் தமிழ்-பிராமி எழுத்துக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இப்பானைக்கீறல்கள் மதுரை, கரூர், உறையூர் போன்ற தலைநகர்களிலும் கொற்கை, அழகன்குளம், அரிக்கமேடு போன்ற துறைமுகங்களிலும் மட்டுமல்லாது அழகரை, போளுவாம்பட்டி போன்ற சிற்றூர்களிலும் கிடைக்கின்றன.
இப்பானைக்கீறல்களில் சாமானியர்களான பொதுமக்கள் கூட தத்தம் பெயர்களை எழுதியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், அதே காலகட்டத்தில் அல்லது சற்றே பிந்தைய காலத்தில் எழுந்த சங்கநூல்களை ஆக்கியோர், தொகுத்தோர் சமுதாயத்தின் எல்லாத் தளங்களையும் சார்ந்தவர்கள் என்றும் தெரிகிறது.
சங்கப்புலவர்களில் அரசர்களும் வணிகர்களும் பல்வேறு தொழில் செய்தவர்களும் பெண்டிரும் அடங்குவர். இச்சான்றுகளை நோக்கினால் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் முதல் அறிவொளி இயக்கம் மிகப் பரவலாக நடைபெற்றது என்ற முடிவுக்கு வரலாம்.
சங்கத்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அம்பலம், பொதியில், மன்றம் போன்ற அமைப்புகளும்தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் குறிப்பிடும் நிகமம் போன்ற அமைப்புகளும் தமிழகத்தில் முற்காலத்திலேயே ஊராட்சி முறை ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதற்குச் சான்றுகளாகும்.
மக்கள் பேசும் மொழியான தமிழ் மொழியே பல்வேறு ஆளும் மன்றங்களுக்கு ஆட்சிமொழியாக அமைந்திருந்தது. இந்தச் சூழ்நிலையில் எழுத்தறிவு ஓர் அறிவொளி இயக்கமாகவே தமிழகத்தின் கிராமப்புறங்களில்கூடப் பரவியிருந்தது என்பதற்கு எங்கு தோண்டினாலும் கிடைத்துவரும் பானைக்கீறல்களையே சான்றுகளாகக் காட்டலாம்.”
( ‘சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம்’ எனும் கட்டுரையின் சிறு பகுதி - மொழி ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்)
• மற்றைய இந்திய மொழிகளை விட, தமிழில் மொழி செழுமை , இலக்கிய செழுமை அதிகம் என்பது தெரிந்ததே. இது தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியிலும் காணலாம். இது தமிழ் இனம் மொழியிலும் , எழுத்தறிவிலும் கூடிய ஆர்வத்துடன் இருந்ததையே காட்டுகிறது.
• இந்த எழுத்தறிவு என்பது,இலக்கியத்தோடு சுருங்கிவிடவில்லை. அந்த எழுத்தறிவு பல தளங்களுக்கு விரிவடைந்து இருக்கிறது.அதில் ஒன்று உலகின் பல நாடுகள் உடனான கடல் கடந்த வணிகம். இந்த கடல்கடந்த வணிகம் செய்யும் திறன், எழுத்தறிவினால் கிடைக்கும் திறனே.
இந்த கடல் கடந்த வணிகம் பற்றி ஐராவதம் மகாதேவன் கட்டுரையிலிருந்து
“சங்ககாலத்திற்கு முன்னரே தமிழ் மக்கள் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடும்" பொருட்டு மேலைநாடுகளுடனும், கீழைநாடுகளுடனும் கடல் மூலமாக வாணிபம் செய்து வந்தார்கள். சங்க காலத்தில் தமிழகத்துடன் நடந்த ரோமானிய வாணிப அளவு எவ்வளவு பரந்தது என்பதை தமிழகத்தில் கிடைத்துள்ள ரோமானிய நாணயங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வாணிகத்தின் மூலமாகத் தமிழ்நாட்டுக்குப் பெரும் செல்வம் கிடைத்ததுடன், மேலைநாட்டுச்சமுதாயத்தின் எழுத்துமுறையைப் பற்றியும் கிடைத்தது.
அண்மையில், எகிப்து நாட்டில் செங்கடல் கரையில் அமைந்துள்ள க்வெசிர் அல்காதிம், பெரெனிகே ஆகியதுறைமுகங்களில் தமிழ்மொழியில் தமிழ்-பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ள பானைக்கீறல்கள்அகழ்வாய்வுகள் மூலமாகக் கிடைத்துள்ளன. இப்பானைக்கீறல்களில் சா[த்]தன், க[ண்]ணன், கொ[ற்]ற[ப்] பூமான் ஆகிய தமிழ்ப்பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.
வியன்னா நகரத்து அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு பாப்பிரஸ் ஏட்டில் கி.பி 2ம் நூற்றாண்டில் முசிறியிலிருந்தஒரு தமிழ் வாணிகனுக்கும் எகிப்து நாட்டு அலெக்சாந்திரிகா நகரிலிருந்த ஒரு ரோமானிய வாணிகனுக்கும்இடையே ஏற்பட்ட கடல வாணிகா ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆவணம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ள போதிலும், சங்க காலத்தில் தமிழகத்தில் கடல் வாணிபம் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
( ‘சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம்’ எனும் கட்டுரையின் சிறு பகுதி - மொழி ஆய்வாளர்ஐராவதம் மகாதேவன்)
• இன்றைய சமூக ஊடகங்களில், புத்திசாலித்தனமான கேள்வியை கேட்பதாக நினைத்து திராவிட அறிவுஜீவிகள் அடிக்கடி முன்வைக்கும் கேள்வி இதுதான்.
‘ அப்படியானால் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் உருவான முதல் தலைமுறை பட்டதாரி குடும்பம் எனஅழைக்கிறோமே. அப்படியானால் அதன் அர்த்தம் என்ன? உனது தாத்தா , பாட்டன் ஏன் கையெழுத்து வைக்கதெரியாமல் , கைநாட்டு வைத்தான்? ‘
இது திராவிட அறிவுஜீவிகளிடம் வரலாற்று புரிதல் இல்லாததை,அரை அவியலான அறிவைகொண்டிருப்பதையே காட்டுகிறது.
தமிழ் இனத்தின் வரலாற்றை பார்த்தால் சங்ககாலத்திற்கும் முன்பான காலத்தில் இருந்தே சாமானியருக்கும் எழுத்தறிவு இருந்திருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக அது தொடர்ந்தும் வந்திருக்கிறது. இடையில் இந்த நூல் அறுபட்டிருக்கிறது.
இந்த நூல் அறுபட்டதற்கான காரணம், வர்ணாசிரம முறை தமிழ் சமூகத்திற்குள் உள்நுழைந்ததும், 14ம் நூற்றாண்டிலிருந்து தமிழகம் பிற மொழி ஆட்சியாளர்களின் ஆட்சியில் இருப்பதும் பிரதான காரணமாக இருக்கலாம்.
• தமிழர்களின் எழுத்தறிவு, கல்வியறிவு மீதான பற்று எனும் உள்ளார்ந்த பண்பை விளக்க இன்னும் சிலஉதாரணங்களை தருகிறேன்.
இலங்கையில் ‘தனி சிங்களம்’ (Sinhala Only Act) எனும் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டது. இந்த ‘தனிசிங்களம்’ எனும் சட்டத்தினால், எப்படி இலங்கை தமிழர்கள் அரச நிர்வாகம், உயர் தொழில்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள் என்பதை Fighting Words: Language Policy and Ethnic Relations in Asia எனும் புத்தகம் பின்வருமாறு விளக்குகிறது.
"In 1956, 30 percent of the Ceylon administrative service, 50 percent of the clerical service, 60 percent of engineers and doctors, and 40 percent of the armed forces were Tamil.
By 1970 those numbers had plummeted to 5 percent, 5 percent, 10 percent, and 1 percent, respectively."
இந்த உதாரணம் தனி சிங்கள சட்டத்தை பற்றியது அல்ல.
இந்த உதாரணத்தில் உள்ள புள்ளிவிபரங்கள், இலங்கையில் 1956 இற்கு முன்பு வரை இலங்கை தமிழ் சமூகம் கல்வியில் சிறந்து விளங்கி, அரச நிர்வாகம், உயர் தொழில்களில் தனது மக்கள் தொகை சதவீதத்திற்கும் அதிகமான பங்கை எப்படி கைப்பற்றியிருந்ததுஎன்பதை தெளிவாக காட்டுகிறது.
அன்றைய இலங்கையின் சனத்தொகையில் இலங்கை தமிழர்கள் 12% இற்கும் குறைவு. ஆனால் இலங்கைஅரச நிர்வாகத்தில் 30% ஐயும், மருத்துவர், பொறியாளர்களில் 60% பங்கையும் கொண்டிருந்தார்கள்.
இலங்கையில் பெரியார், திராவிட கருத்தியல் போன்ற வார்த்தை வித்தைகளெல்லாம் என்றுமே இருந்ததில்லை என்பதை நினைவு கொள்ளவேண்டும்.
உடனே திராவிட அறிவுஜீவிகள் பாய்ந்தடித்து , இந்த உயர்கல்வி பெற்ற தமிழ் சமூகம் பெரும்பாலும் வெள்ளாளசமூகத்தை சேர்ந்தவர்கள் என வழமையான சாதியை காரணம் காட்ட முயல்வார்கள்.
ஆனால் நான் இங்கு குறிப்பிட முனைவது, தமிழ் இனம் கல்வியறிவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை.
• இன்று மேற்கு ஐரோப்பாவை எடுத்துகொண்டாலும், கடந்த 30 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து ஐரோப்பாவிற்கு அகதிகளாக குடியேறிய இலங்கை தமிழர்களின் பொருளாதார,கல்வியறிவு ஒப்பீட்டளவில், சதவீத கணக்கில் இதே காலப்பகுதிகளில் அகதிகளாக குடியேறிய மற்றைய நாட்டவரை விட மேம்பட்ட நிலையிலேயே இருக்கிறது.
காரணம் தமிழ் இனத்தின் உள்ளார்ந்த பண்பான கல்வியறிவு மீதான பற்று எங்கு சென்றாலும் தொடர்கிறது.
இத்தகைய உள்ளார்ந்த பண்புகளை மற்றை இனங்களிலும் காணலாம்.
யூத இனம் எந்த நாட்டில் இருந்தாலும் கல்வி, பொருளாதாரத்தில் வலிமையுடனும் மற்றும் அதிகாரத்திற்கு மிகநெருக்கமான இடத்தில் இருப்பதும் அந்த இனத்தின் உள்ளார்ந்த பண்பே.
மேற்குலக நாடுகளின் பள்ளிகளில் சீன வேர்களை கொண்ட குடும்பத்தின் பிள்ளைகள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் நடப்பது காலங்காலமாக நடக்கிறது. இது தொடர்பாக பல கட்டுரைகள் வந்தருக்கின்றன.
ஒரு பிபிசி கட்டுரை பின்வருமாறு விவரிக்கின்றது.
“The study from the Institute of Education in London examined the maths results in Pisa tests of 14,000 teenagers in Australia - which showed that children from East Asian families, mostly Chinese, were much higher performing than those from Australian families or other migrants, such as from the UK.
But the researchers suggest there is not a simplistic explanation for this success - and that family background and parental involvement in choices about education is very significant.”
ஆக இத்தகைய ஆய்வுகளில், ஒரு இனத்தின் வளர்ச்சிக்கான முழு காரணத்தையும் அந்த இனத்தின்உள்ளார்ந்த பண்பை புரிந்து கொள்ளாமல் அணுகுவது சரியான முறையல்ல.
அதுபோல கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக்கான முழு காரணமும் திராவிடத்தின் ஆட்சியே காரணம் என்று தட்டையாக அணுகாமல் , அதில் தமிழர்களின் உள்ளார்ந்த பண்பான கல்வியறிவு மீதான பற்றும் பெரும் பங்கு வகித்திருக்கிறது என்பதை உணரவேண்டும்.
இதை வேறொரு விதமாக எளிமையாக புரியும்படி சொன்னால், இதே திராவிடத்தின் ஆட்சி வேறொரு மாநிலத்தில் இருந்திருக்குமானால் இதே வளர்ச்சி வேகம் நிகழாமல் போயிருக்கலாம்.
3. தமிழ் தேசிய கருத்தியல்
மூன்றாவதாக திராவிட கருத்தியல் ஆட்சி முறை மட்டுமே இத்தகைய பொருளாதார,சமூக, கல்வி வளர்ச்சிக்கு பாதையை போடும் என சொல்வதும் ஒரு அறிவுபூர்வமான வாதம் அல்ல.
காரணம் தமிழ் தேசிய கருத்தியல் எந்தவொரு கட்டத்திலும் பிற்போக்குத்தனமான, காலத்திற்கு ஒவ்வாதவைகளை நடைமுறைபடுத்த போவதாக சொல்லியதில்லை.
தமிழகம் இன்று நிற்கும் இடத்திலிருந்து தொடர்ந்து மேலே நோக்கி செல்வதற்கான பார்வையைத்தான் தமிழ்தேசியமும் கொண்டிருக்கிறது.
அத்துடன் திராவிடத்திடம் இல்லாத சில கூடுதல் தகைமையையும் அது தனக்குள் வைத்திருக்கிறது.
பல இனங்கள் வாழும் இந்திய நிலப்பரப்பில், ஒவ்வொரு இனமும் தனித்துவமான மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றை கொண்டுள்ளன. இவை தொடர்ந்து இருக்கும்போது, எதிர்காலத்தில் ஒரு முரண்பாடு தோன்றுவதற்கான சாத்தியம் கட்டாயம் உண்டு. அத்துடன் ஒரு இனம் மற்றைய இனத்தை மேலாண்மை செய்யமுயலும்.
ஒரு இனம் அதிகாரத்தை தன்னுள் வைத்துகொண்டு மற்றைய இனங்களை மேலாண்மை செய்ய முயலும்போது, இதிலிருந்து தற்காத்து கொள்வதற்கான பொறிமுறையை( defensive mechanism) மொழிவழி தேசிய இனகருத்தியலே வைத்திருக்கிறது.
இந்த தற்காப்பு பொறிமுறை திராவிட கருத்தியலில் இல்லை. அது இல்லாத ஒரு இனம் இருப்பதாகபிம்பத்தை கட்டமைத்து , தமிழ் தேசிய இனத்தின் கூறுகளை சிறிது சிறிதாக சிதைத்துவருவது எல்லோருக்கும்தெரிந்ததே.
ஆக இதே வளர்ச்சி பாதையை தொடர வைக்கவும், அதே நேரம் தேசிய இனத்திற்கான தற்காப்பு பொறிமுறையை தக்கவைக்கவும் தமிழ் தேசிய கருத்தியலாலேயே முடியும்.
முன்பு சொன்னது போல பொருளாதார, சமூக வளர்ச்சி குறியீடுகளை தாண்டி மற்றைய காரணிகளும் ஒருஅரசை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய பங்கை வகிக்கின்றன. அதில் ஒன்றுதான் பல இனங்கள் வாழும் இந்தியநிலப்பரப்பில் தனது இனத்திற்கான சரியான கருத்தியலை தேர்த்தெடுப்பதுவும்.
4. inadvertent (not resulting from or achieved through deliberate planning)
இதை சொல்லும்போது நகைச்சுவையாக தோன்றலாம். ஆனால் இந்த சாத்தியத்தையும் மறுப்பதற்கு இல்லை. இப்படித்தான் நடந்ததா என்பதை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான் துல்லியமாக சொல்லமுடியும்.
தமிழ்நாட்டில் நிறைந்து காணப்படும் அதிகமான engineering college களிற்கான காரணமாக அன்றையஆட்சியாளர்கள், தங்களுக்கு வேண்டியவர்கள் பணம் உழைப்பதற்கான வழியை ஏற்படுத்தி தருவதற்காக இந்தகல்லாரிகளின் அனுமதியை வழங்கியிருக்கலாம். அதிகாரமும் , செல்வந்தர்களும் கொடுக்கல்-வாங்கலைசெய்வதற்காக கைகுலுக்கி கொள்வது நடப்பதுதான்.
அவ்வாறாக தொடங்கியது இந்த கல்வியறிவு வளர்ச்சிக்கு உதவியிருக்கலாம். அதனால்தான் இதை inadvertent என்று குறிப்பிட்டேன்.
தமிழகத்தில் கல்வி மறுமலர்ச்சியை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்காமல், கொடுக்கல்-வாங்கல் நடந்ததால் திட்டமிடப்படாமலேயே இந்த கல்வி மறுமலர்ச்சி நிகழ்ந்திருக்கலாம். (not resulting from or achieved through deliberate planning)
European colonization என்பதே inadvertent என்பதை மேற்கத்தைய வரலாற்றாசிரியர்களே ஒப்புகொள்கிறார்கள்.
• நீண்ட பதிவின் சுருக்கம்
1. பொருளாதார, சமூக வளர்ச்சி, மனித வள மேம்பாடு குறியீடு என்பவற்றை தாண்டியும், ஒரு ஆட்சியாளர்களைதீர்மானிப்பதற்கான பல காரணிகள் உண்டு.
2. 50 ஆண்டுகால தமிழகத்தின் வளர்ச்சிக்கு , தமிழ் இனத்தின் உள்ளார்ந்த பண்புக்கு முக்கிய பங்கு உண்டு.
3. தமிழ்தேசிய கருத்தியலும் இதே வளர்ச்சி பாதையிலேயே செல்லவிரும்புகிறது. அத்துடன் பல இனங்கள் வாழும் இந்திய நிலப்பரப்பில் எழக்கூடிய இன மேலாண்மையில் இருந்து தற்காத்து கொள்வதற்கான பொறிமுறையையும் கொண்டுள்ளது.
ஆக இத்தனை காரணிகளையும் வேண்டுமென்றே புறந்தள்ளி, திராவிட அறிவுஜீவிகள் திராவிடத்தின் சாதனை என திரும்ப திரும்ப சொல்வது உள்நோக்கம் உடையதே.
அத்துடன் இந்த திராவிடத்தின் சாமர்த்தியமான வாதம் ஒரு தமிழ் இனத்தின் வரலாற்றை, பெருமைகளை முற்றாக சிறுமைபடுத்துகிறது. தமிழ் இனத்தின் சிறப்புகளே கடந்த 50 ஆண்டுகளில்தான் நிகழ்ந்தது என்பது போன்ற தோற்றத்தை தருகிறது.
க.ஜெயகாந்த்
(2018 ஆண்டில் முகநூல் பதிவிற்காக எழுதப்பட்ட கட்டுரை)













Comments
Post a Comment